உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார்? 31 ஆம் திகதி நடக்கப்போவது என்ன?
“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் ‘பிரதான சூத்திரதாரி’ யார் என்பது குறித்த தகவலை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வெளிப்படுத்தவுள்ளேன்.”
இவ்வாறு பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி உதய கம்மன்பில Udaya Gammanpila அறிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
கடந்த ஒன்றரை வருடங்களாகத் தாம் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளின் அடிப்படையில், ‘உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தேடல்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி நூல் ஒன்றைத் தயாரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நூல் வெளியீட்டு விழா மார்ச் 31 ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு கொழும்பு சம்புத்தத்வ ஜயந்தி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
“ அரசாங்கத்தினால் இதுவரை வெளிப்படுத்தப்படாத பல அதிர்ச்சியூட்டும் உண்மைகளை இந்த வெளியீட்டின் போது பகிரங்கப்படுத்தவுள்ளோம்.
கடந்த ஏழு வருடங்களாக உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் அரசியலுக்காக விற்கப்பட்டது. ஆட்சிகளை உருவாக்கவும், கவிழ்க்கவும் இது ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டது.
எவ்வித அடிப்படை ஆதாரங்களும் இன்றி, இராணுவத்தினரை வேதனைப்படுத்துவதற்கும், அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கும் இந்தச் சம்பவம் பயன்படுத்தப்பட்டது.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த ஏமாற்று வேலைகளுக்கு மார்ச் 31 ஆம் திகதியுடன் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.” – என உதய கம்மன்பில மேலும் கூறினார்.





