காசாவில் நிரந்தர போர்நிறுத்தம் கோரி UN பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்த அமெரிக்கா

காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தத்தை அமல்படுத்த கோரி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் பெற்றுள்ள அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு மற்ற உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
இஸ்ரேல் – காசா இடையே சில மாதங்களுக்கு முன் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டு கைதிகள் மற்றும் பிணைக் கைதிகள் பரஸ்பரம் விடுவிக்கப்பட்டு வந்தனர். எஞ்சியுள்ள 58 பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மறுத்ததால், இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கியது. நிவாரண பொருட்கள் காசாவுக்குள் நுழைவதையும் தடுத்தது. இதனால் காசாவில் உள்ள மக்கள் உணவுக்கு போராடும் நிலை ஏற்பட்டது. உணவு விநியோகிக்கும் இடத்தில் ஏற்பட்ட மோதல் காரணாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதிலும் பலர் இறந்தனர்.
இந்த நிலை தொடர்ந்ததால், காசாவில் உணவு பொருட்களை விநியோகித்த அமெரிக்க ஆதரவு அறக்கட்டளை அமைப்பு தனது பணியை நிறுத்தியது. இதையடுத்து , காசாவில் உடனடி போர் நிறுத்தம் அமல்படுத்த கோரி, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வீட்டோ அதிகாரம் பெற்றுள்ள அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.
அதில், காசாவில் மனிதாபிபானம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதால், அங்கு உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், அங்குள்ள 21 லட்சம் பாலஸ்தீனர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் வகையில் அனைத்து தடைகளையும் இஸ்ரேல் நீக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்றும் இந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இதை நிபந்தனையாக கூறவில்லை. மேலும், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும், காசாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற அமெரிக்காவின் இரண்டு கோரிக்கைகளும் இந்த தீர்மானத்தில் வலியுறுத்தப்படவில்லை. இந்த தீர்மானத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள மற்ற 14 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் – காசா இடையே அமைதியை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சில கோரிக்கைகைளை ஹமாஸ் அமைப்பினர் ஏற்காததால், இஸ்ரேல்-காசா இடையேயான பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுவதில் சிக்கல் தொடர்கிறது.