ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலால் நிச்சயமற்ற சூழல் அதிகரிக்கும்: IMF எச்சரிக்கை

ஈரான்மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் எரிசக்தி துறைக்கும் அப்பால் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அனைத்துலக பண நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எச்சரித்துள்ளார்.
“ஏற்கெனவே நிலவிவரும் நிச்சயமற்ற சூழலை மேலும் மோசமாக்கும் சம்பவமாக அந்தத் தாக்குதலைப் பார்க்கிறோம்,” என்று புளூம்பர்க் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் ஜோர்ஜிவா தெரிவித்தார்.எரிசக்தி விலைகளில்தான் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற அவர், அடுத்தடுத்து மேலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று கூறினார்.
அனைத்துலக அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏறக்குறைய 5.7% அதிகரித்து ஒரு பீப்பாய் $81.40 டாலர் என்ற விலையை எட்டியது.அமெரிக்கத் தலைமையிலான அனைத்துலக வர்த்தகத்தால் மெதுவான வளர்ச்சி ஏற்படும் என்று எச்சரித்த அனைத்துலக பண நிதியம் இவ்வாண்டுக்கான அனைத்துலக வளர்ச்சி முன்னுரைப்பை ஏப்ரல் மாதம் குறைத்தது.
உலக நாடுகள் பொருளியல் மந்தநிலையைத் தவிர்த்தாலும் நிச்சயமற்ற சூழலுக்கான வாய்ப்பு அதிகம் என்றும் வளர்ச்சிக்கான முன்னுரைப்பை அது குறைக்கக்கூடும் என்று ஜார்ஜிவா சொன்னார்.
அமெரிக்காவின் எதிர்பாரா ஆகாயத் தாக்குதலுக்கு ஈரான் கொடுக்கவிருக்கும் பதிலடிக்கு உலக நாடுகள் தயாராகின்றன.
வர்த்தகப் பதற்றங்களால் உலகப் பொருளியல் ஏற்கெனவே மோசமான நிச்சயமற்ற சூழலை எதிர்கொண்டுள்ள நேரத்தில் ஈரான்மீது அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தொடுத்த தாக்குதல் புவிசார் அரசியல் அபாயங்களை அதிகரித்துள்ளது.
உடனடி பாதிப்பாக, எண்ணெய், எரிவாயு ஆகியவற்றின்மீது ஏற்படக்கூடிய தாக்கத்தை அனைத்துலக பண நிதியம் கண்காணிப்பதாகத் திருவாட்டி ஜார்ஜிவா சொன்னார்.“அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதைப் பார்க்கலாம்,” என்ற அவர், எரிசக்தி விநியோக தொடர்களில் இடையூறு ஏற்படுமா என்று கவனிப்பதாகச் சொன்னார். “அவ்வாறு நடைபெறக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்,” என்றார் அவர்.