பிரித்தானிய பொருளாதார சவால் – விரைவான பதிலுக்கு நிதியமைச்சர் தயாராகிறார்
போர் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் விளக்கமளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் அவர் ஆற்றவுள்ள உரையில், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையின் உள்நாட்டு தாக்கங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது உரை மூன்று முக்கிய அம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலில், போர் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்த சுருக்கமான விளக்கம் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, புதிய அணுமின் நிலையங்கள் அமைப்பை வேகப்படுத்தும் திட்டங்கள் மற்றும் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும்
நடவடிக்கைகள் குறித்து அவர் அறிவிப்பார்.
மேலும், “புதிய இலாபமீட்டல் எதிர்ப்பு கட்டமைப்பு” தொடர்பான முன்மொழிவும் முன்வைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மாதங்களில் எரிசக்தி கட்டணங்கள் அதிகரிக்கும் சூழ்நிலையில், குடும்பங்களுக்கு வழங்கப்படக்கூடிய மேலதிக ஆதரவுகள் பற்றியும் ரீவ்ஸ் விளக்கமளிக்க உள்ளார்.
ஜூன் மாத இறுதி வரை எரிவாயு மற்றும் மின்சாரத்திற்கான விலை உச்சவரம்பு அமுலில் இருப்பதால், அடுத்தகட்ட நடவடிக்கைகளை திட்டமிட அமைச்சர்களுக்கு இன்னும் காலவகாசம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.





