அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து சமூக ஊடகக் கட்டுப்பாட்டில் களமிறங்கும் பிரித்தானியா
பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது குறித்து அந்நாட்டு அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
சமூக ஊடகத் தளங்களுக்கான குறைந்தபட்ச வயதை உயர்த்துமாறு 60-க்கும் மேற்பட்ட தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, இந்த வார இறுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள ‘குழந்தைகள் நல்வாழ்வு மற்றும் பாடசாலைகள் சட்டமூலத்தில்’ இதற்கான திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன.
இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், அடுத்த ஓராண்டுக்குள் 16 வயதுக்குட்பட்டவர்கள் தமது தளங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளைச் சமூக ஊடக நிறுவனங்கள் எடுக்க வேண்டும்.
மேலும், பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசிக் கொள்கைகளை ஆய்வு செய்யவும், பெற்றோருக்கான ‘திரை நேர’ வழிகாட்டுதல்களை ஏப்ரல் மாதத்திற்குள் வெளியிடவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் அண்மையில் கொண்டுவரப்பட்ட 16 வயது எல்லைக் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து பிரித்தானியாவும் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.





