கொள்கலன் ஒன்றில் மறைந்து மலேசியாவிற்கு தப்பிசெல்ல முற்பட்ட இரு இலங்கையர்கள் கைது!
கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது சீனாவில் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களும் ஒரு வருடத்தின் பின்னர் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்று (24.02) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகிறது.
இந்த இரண்டு சந்தேக நபர்களும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் ஏற்றப்பட்ட வெற்று கொள்கலனில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.
26 வயதான மதி ராஜேந்திரன் மற்றும் 39 வயதான ஜெயக்குமார் தருமராசா ஆகிய இரு இலங்கையர்களே இவ்வாறு பயணித்துள்ளதாக கூறப்படுகிறது.
சந்தேகநபர்கள் இருவரையும் நாட்டிலிருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுத்ததன் பின்னர், இன்று காலை 05.01 மணியளவில், சீனாவின் ஷாங்காய் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-867 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்களம், வர்த்தகம் மற்றும் ஆட்கடத்தல் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று அவர்களை கைது செய்து கொழும்பு கிருலப்பன பகுதியில் உள்ள பிரதான அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.





