ரஷ்யா-உக்ரேன் இடையிலான சமரச பேச்சுவார்த்தையை ஏற்று நடத்த தயார்: துருக்கி அதிபர் ஏர்டோகன்

துருக்கி, ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான சண்டைநிறுத்த, நிரந்தர அமைதிக்கான சமரசப் பேச்சுவார்த்தையை ஏற்றுநடத்த தயாராக இருப்பதாய் அதிபர் தய்யிப் ஏர்டோகன் , பிரெஞ்சு அதிபர் இமெனுவல் மெக்ரோனிடம் கூறியுள்ளார்.
தொலைபேசியில் உரையாடிய ஏர்டோகன் அவ்வாறு சொன்னதாக அவரது அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை (மே 11) தெரிவித்தது.
போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்தான்புல்லில் வைத்து உக்ரேனிடம் நேரடி பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஞாயிற்றுக்கிழமை பரிந்துரைத்தார்.
உக்ரேன் பேச்சுவார்த்தைக்குத் தயார், ஆனால் ரஷ்யா முதலில் சண்டைநிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி பதிலளித்தார்.
30 நாள் நிபந்தனையற்ற சண்டைநிறுத்த உடன்பாடு செய்துகொள்ள வேண்டும் இல்லாவிடில் ரஷ்யா மீது பெரிய அளவில் புதிய தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று ஃபிரான்ஸ் உள்ளிட்ட முக்கிய ஐரோப்பிய வல்லரசுகள் அழுத்தம் கொடுத்ததை அடுத்து திரு புட்டினின் பரிந்துரை வந்துள்ளது.
போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனை எட்டப்பட்டுள்ளது என்றும் அந்த வாய்ப்பைக் கைப்பற்றவேண்டும் என்றும் திரு எருதுவான் திரு மெக்ரோனிடம் தொலைபேசியில் கூறினார்.
ரஷ்யாவும் உக்ரேனும் போரை நிறுத்தி நிரந்தர அமைதியை எட்ட சமரசப் பேச்சுவார்த்தையை ஏற்று நடத்துவது என அனைத்து விதங்களிலும் பங்களிக்கத் துருக்கி தயாராக உள்ளதாய் அவர் குறிப்பிட்டார்.
2022 மார்ச் மாதம், ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் துருக்கி முன்னெடுத்தது.