மூன்றாம் உலகப்போர் அபாயம் – ரஷ்யா, உக்ரைன் போர் குறித்து ட்ரம்ப் எச்சரிக்கை.
உலக அரசியலில் மீண்டும் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள கருத்து சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இது மூன்றாவது உலகப்போருக்கு வழிவகுக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், போரின் கொடூரம் மற்றும் அதனால் ஏற்படும் மனித இழப்புகளை சுட்டிக்காட்டி, உலக நாடுகள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யா–உக்ரைன் போர் உலக அரசியல் அரங்கில் நீண்ட காலமாக நீடித்து வரும் மிகப்பெரிய நெருக்கடியாக மாறியுள்ளது. 2014 ஆம் ஆண்டு பெப்ரவரியில் உக்ரைனில் ஏற்பட்ட டிக்னிட்டி புரட்சிக்கு பின்னர், ரஷ்யா கிரிமியா தீபகற்பத்தை ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்துக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து டோன்பாஸ் பகுதிகளில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் மற்றும் உக்ரைன் இராணுவத்துக்கிடையே மோதல்கள் தீவிரமடைந்தன. சில காலங்களில் தாக்குதல்களின் தீவிரம் குறைந்தாலும், 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 அன்று ரஷ்யா மேற்கொண்ட முழுமையான படையெடுப்பு இந்த மோதலை முழு அளவிலான போராக மாற்றியது.
இந்தப் போர் கடந்த நான்கு ஆண்டுகளாக தொடர்ந்துவரும் நிலையில், ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு நிகழ்ந்த மிகப்பெரிய ராணுவ மோதலாக இது கருதப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி, உக்ரைன் நாட்டின் சுமார் 20 சதவீத பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் மட்டும் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், மனித இழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இந்தச் சூழலில், அமெரிக்கா ரஷ்யா–உக்ரைன் இடையே நடுவர் நாடாக செயல்பட்டு வருகிறது. ஆனால் பேச்சுவார்த்தை முயற்சிகள் எதிர்பார்த்த அளவில் முன்னேற்றமின்மையால் ட்ரம்ப் நிர்வாகம் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், உக்ரைனுடன் மேற்கொள்ளப்பட்ட தாதுக்கள் மற்றும் மறுசீரமைப்பு முதலீட்டு ஒப்பந்தங்கள், அமெரிக்காவின் ஆதரவை தொடர்ந்து நிலைநாட்டும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதனால், இந்தப் போர் இராணுவ மோதலாக மட்டுமல்லாமல், அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் கொண்ட உலகளாவிய பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது.
நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் ரஷ்யா–உக்ரைன் போர், ஐரோப்பாவை மட்டுமல்லாமல் உலக அரசியல் சமநிலையையே அச்சுறுத்தும் நிலையில் உள்ளது.
இந்தப் போருக்கு விரைவான தீர்வு காண வேண்டும் என்ற ட்ரம்ப் அரசின் முயற்சிகள், இரு நாடுகளின் மெதுவான பேச்சுவார்த்தை காரணமாக சிக்கலில் சிக்கியுள்ளது.
இந்நிலையில், ட்ரம்ப் முன்வைத்துள்ள மூன்றாம் உலகப் போர் குறித்த எச்சரிக்கை, சர்வதேச சமூகத்திற்கு ஒரு தீவிர எச்சரிக்கை மணி எனக் கருதப்படுகிறது.
இனி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தான், இந்தப் போர் அமைதிக்கான பாதையில் திரும்புமா அல்லது உலகளாவிய நெருக்கடியாக மாறுமா என்பதை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமையும்.





