யாழில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பிரசவித்த தாய்க்கு நேர்ந்த சோகம்
யாழ்ப்பாணத்தில் 21 ஆண்டுகளாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த பெண் ஒருவர், மூன்று குழந்தைகளைப் பிரசவித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 45 வயதான யோகராசா மயூரதி என்ற தாயே நேற்று அதிகாலை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் 21 வருடங்களாக குழந்தைப் பாக்கியம் இல்லாமல் பல்வேறு சிகிச்சைகளை எடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் ஏழாம் மாதம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மூன்று குழந்தைகளைப் பிரசவித்தார்.
குழந்தைகளைப் பிரசவித்த பின்னரான 32 நாட்களில், அவர் இரண்டு நாட்கள் மட்டுமே கண் விழித்துப் பார்த்த நிலையில், ஏனைய அனைத்து நாட்களும் மயக்க நிலையிலேயே காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவர் சிகிச்சை பெற்று வந்த காலப்பகுதியில் குடல் மற்றும் ஈரல் ஆகிய பகுதிகளில் கிருமித்தொற்று இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எனினும், உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கை இதுவரை வெளியாகவில்லை. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.





