தேர்தல் ஆணைய நடவடிக்கைகளுக்கு எதிராக சென்னையில் வணிகர்கள் போராட்டம்
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் மார்ச் 31 ஆம் திகதி போராட்டம் நடைபெறும் என அதன் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
கரூர் தனியார் ஹோட்டலில் இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில மாநாட்டுக்கான ஆயத்தக் கூட்டத்தில்
கலந்துக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி திருவாரூரில் 43 ஆவது வணிகர் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது.
கரூர் மாவட்டத்தில் இருந்து 5,000 பேர் பங்கேற்கின்றனர்.
தேர்தலை திருவிழா என்கின்றனர். ஆனால் தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்ததில் இருந்து வியாபாரிகளுக்கு
இருண்ட காலமாகவே உள்ளது.
தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படை என்ற பெயரிலேயே வியாபாரிகளை இலக்குவைத்து தாக்குதல் நடத்துகின்றனர்.
கரூரில் மார்ச் 25 ஆம் திகதி அரிசி மூட்டை ஏற்றிச் சென்ற வாகனத்தை மடக்கி வைத்துக் கொண்டு ஆவணங்கள் முறையாக இருந்தப்போதும் வாடிக்கையாளர் தொலைபேசி எண் மாறியிருந்ததால் வியாபாரியிடம் ரூ.1.13 லட்சத்தை அபகரித்துவிட்டனர்.
வீட்டு வாசலில் நின்று வியாபாரிகளிடம் பணம் பறித்து வருகின்றனர். இது கடுமையான அத்துமீறல் என்பதை வணிகர் சங்க பேரமைப்பு வன்மையாக கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறோம்.
தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வியாபாரிகள் கோரிக்கையை ஏற்று அதிகத்தொகை கொண்டு செல்லக்கூடிய சூழலை உருவாக்குவோம் எனக்கூறியுள்ளார்.
ஆனால் அவர்கள் தலைமையின் கீழ் உள்ள அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை மூலம் வியாபாரிகளை துன்புறுத்தக்கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும்.
இந்த நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்ற காரணத்தினால் வரும் மார்ச் 31 ஆம் திகதி சென்னையில் முதற்கட்டமாக போராட்டத்தை
தொடங்கவிருக்கிறோம். இது தொடக்கம் தான், நிறைவல்ல. தீர்வு ஏற்படும் வரை பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவிப்போம்.
உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் பெறக்கூடிய வியாபாரிகள் ஏப்ரல் முதலாம் திகதி முதல் ஒரே ஒரு முறை உரிமம் பெற்றால் போதும், புதுப்பிக்க தேவையில்லை. ரூ.1.5 கோடிக்கு கீழ் வர்த்தகம் உள்ள நிறுவனம் மாநில அரசிடமும், அதற்கு மேல் உள்ள நிறுவனங்கள்
மத்திய அரசிடம் உரிமம் பெற்றால் போதும் ஆயுட்கால உரிமத்தை மாநில அரசின் அழுத்தத்தினால் மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையை வலியுறுத்துகிறோம். தமிழகத்தில் உள்ள பல்வேறு உரிமங்கள் முறையை ஒற்றை சாளர முறையில் ஒரே முறை ஆயுட்கால உரிமமாக வழங்க வேண்டும்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக அனைத்து கட்சிகளிடமும் எங்கள் கோரிக்கைகளை வழங்கியுள்ளோம்.
யார் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு செய்து அறிவிப்போம்” என்றார்.





