இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை விரிவுபடுத்த வர்த்தக, இடப்பெயர்வு ஒப்பந்தங்கள்
திறமையான இளைஞர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாய்ப்புகளை வழங்கும் வகையில் மத்திய அரசு, பல்வேறு நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் இடப்பெயர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
18 ஆவது வேலைவாய்ப்புத் திருவிழாவின் கீழ் மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 61,000 க்கும் அதிகமான இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் விழா இன்று நடைபெற்ற நிலையில் காணொளிக்காட்சி மூலம் பங்கேற்று நியமனக் கடிதங்களை வழங்கிய பின்னர் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
‘‘உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்க அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
நாட்டின் திறமையான இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு நாடுகளுடன் வர்த்தகம் மற்றும் இடப்பெயர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.
நாட்டின் பொருளாதாரம் தற்போது வலுவடைந்திருக்கிறது. பத்தாண்டுகளுக்குள் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) இரட்டிப்பாக்கிய உலகின் ஒரே பொருளாதாரம் இந்தியாதான்.
இன்று, 100 க்கும் மேற்பட்ட நாடுகள் அந்நிய நேரடி முதலீடு (FDI) மூலம் இந்தியாவில் முதலீடு செய்கின்றன. 2014 க்கு முந்தைய பத்தாண்டுகளுடன் ஒப்பிடும்போது அந்நிய நேரடி முதலீட்டு வரவு 2.5 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளது.
இந்த அந்நிய முதலீட்டின் வரவு, இளைஞர்களுக்கு எண்ணற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது” என்றார்.





