சிரியாவின் புதிய தலைவர்களை சந்திக்க டமாஸ்கஸ் வந்தடைந்த அமெரிக்காவின் உயர்மட்ட தூதர்கள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆட்சியின் முன்னணி அரசதந்திரிகள் சிரியாவின் புதிய தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அமெரிக்க அரசதந்திரிகள், வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 20) சிரியா தலைநகர் டமாஸ்கஸ் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் ஹயாத் தாஹ்ரிர் அல்-ஷாம் (HTS) அமைப்பு வழிநடத்தும் சிரியா அதிகாரிகளைச் சந்திக்கவிருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.இதுவே வாஷிங்டனுக்கும் சிரியாவின் அடுத்த தலைவர்களாகப் பார்க்கப்படுவோருக்கும் இடையே நடைபெறும் முதல் நேரடி அதிகாரத்துவ சந்திப்பாகும்.
மத்திய கிழக்கு வட்டாரத்துக்கான முன்னணி அரசதந்திரி பார்பரா லீஃப், பிணைக் கைதிகள் விவகாரங்களுக்கான அமெரிக்க அதிபர் பிரதநிதியும் அரசதந்திரியுமான ராஜர் கார்ஸ்டன்ஸ், மூத்த ஆலோசகராகப் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் டேனியல் ரூபின்ஸ்டீன் ஆகியோர் அந்த அரசதந்திரிகள் ஆவர். டேனியல் ரூபின்ஸ்டீன், அமெரிக்க வெளியுறவு அமைச்சின் சிரியா தொடர்பு நடவடிக்கைகளை வழிநடத்துவார்.
அவர்கள்தான், சிரியாவின் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்தின் ஆட்சியை அந்நாட்டின் கிளர்ச்சிப் படைகள் கவிழ்த்த பிறகு டமாஸ்கஸ் செல்லும் முதல் அமெரிக்க அரசதந்திரிகள்.
மேற்கத்திய நாடுகளின் அரசாங்கங்கள், தலைவர் அகம்மது அல்-ஷராவை உள்ளடக்கிய ஹயாத் தாஹ்ரிர் அல்-ஷாமுடன் தொடர்புகொள்வதற்கான முயற்சிகளை அதிகம் மேற்கொண்டு வருகின்றன. பயங்கரவாத அமைப்பாக ஹயாத் தாஹ்ரிர் அல்-ஷாமை மேற்கத்திய அரசாங்கங்கள் வகைப்படுத்தியிருக்கின்றன. அப்பட்டத்தை விலக்குவது குறித்துப் பேச மேற்கத்திய நாடுகள் தயாராகி வருகின்றன.
கடந்த சில நாள்களாக பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகள் சிரியாவின் புதிய தலைவர்களைத் தொடர்புகொண்டதையடுத்து அமெரிக்க அதிகாரிகள் டமாஸ்கசுக்குப் பயணம் மேற்கொள்கின்றனர்.
சிரியாவின் அரசியல் சூழல் மாறும்போது அனைவரையும் உள்ளடக்குவது, சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு மதிப்பு தருவது போன்ற அம்சங்கள் கருத்தில்கொள்ளப்பட வேண்டும் என்பது வாஷிங்டனின் நிலைப்பாடு. அதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் ஹயாத் தாஹ்ரிர் அல்-ஷாம் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவர் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.