இலங்கைக்கு கிடைக்கப்பெறும் சர்வதேச உதவிகள் குறித்து ஐ.நா.மகிழ்ச்சி!
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிராஞ்ச் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு நிவாரணம் வழங்க அரசாங்கம் விரைவாகவும் முறையாகவும் செயல்பட்டதற்கு இதன்போது ஐ.நா. பிரதிநிதி பாராட்டு தெரிவித்தார்.
உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இதுபோன்ற பேரனர்த்தங்களின் போது இலங்கைக்கு கிடைத்த சர்வதேச ஒத்துழைப்பின் அளவு மிக உயர்ந்த நிலையில் உள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்குத் தேவையான உதவிகளை வழங்க தனது தொழில்முறை மற்றும் தனிப்பட்ட ஈடுபாட்டை முழுமையாகப் பயன்படுத்துவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து இலங்கைக்கு கிடைத்துவரும் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்ற சர்வதேச ஒத்துழைப்பை முறையாக நிர்வகிப்பதற்கும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை விரைவாக மீட்டெடுப்பதற்கும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றது எனவும் பிரதர் கூறினார்.
இச்சந்திப்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ ஆகியோரும் கலந்து கொண்டனர்.





