பிரித்தானியாவில் தமிழர்கள் செரிந்து வாழும் பகுதியில் வெளிநாட்டவர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடி
தமிழர்கள் செறிந்து வாழும் மேற்கு லண்டனில் அமைந்துள்ள ஹில்லிங்டன் பகுதியில் வெளிநாட்டவர்கள் வருகையால் கடும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
சமூக வசதிகள், வேலைவாய்ப்பு மற்றும் பாடசாலை ஆகியவை காரணமாக இந்தப் பகுதி தமிழர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது.
ஆனால் சமீபத்தில் சாகோஸ் தீவுவாசிகளின் பெருமளவு வருகையால் ஹில்லிங்டன் நகர சபை கடும் நிதி அழுத்தத்திற்கு முகம்கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
குடியுரிமையை பெறும் நோக்கில், 2022ஆம் ஆண்டிலிருந்து சாகோஸ் தீவுவாசிகள் பிரித்தானியாவுக்கு வர தொடங்கினர்.
இந்த ஆண்டு மட்டும் ஹில்லிங்டனில் 600க்கும் மேற்பட்ட சாகோஸியர்கள் வந்துள்ளதாகவும், கடந்த வாரம் மட்டும் 152 பேர் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாகவும் நகர சபை தெரிவித்துள்ளது.
வீடற்ற நிலையில் இருப்பவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் வழங்குவது கவுன்சிலின் சட்டப்பூர்வ கடமையாகும். இதனை நிறைவேற்ற 2 மில்லியன் பவுண்ட் வரை செலவழிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இதில் பெரும்பாலான சுமை தமிழர்கள் வாழும் ஹில்லிங்டன் போன்ற இடங்களில் ஏற்படுவதால் உள்ளூர் வரி செலுத்துவோருக்கு பாதிப்பு ஏற்படுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
35 வயதான டேமியன் டர்சோனியல், தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கி, தற்போது ஹில்லிங்டனில் தற்காலிக வசிப்பிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
குடிமகனாக பாதுகாப்பாக உணர இயலும் ஒரே இடம் பிரித்தானியா தான் என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், கன்சர்வேடிவ் கட்சி தலைமையிலுள்ள ஹில்லிங்டன் கவுன்சில், சாகோசியர்களுக்கு ஆதரவு வழங்க நிதி உதவி தேவை என அரசாங்கத்திற்கு கோரிக்கை வைத்துள்ளது.
இந்தச் சுமை முழுவதும் உள்ளூர் வரி செலுத்துவோரின் மேல் போய்விடக்கூடாது என நகர சபை உறுப்பினர் ஸ்டீவ் டக்வெல் தெரிவித்தார்.
பிரித்தானிய குடிமக்களான சாகோஸ் தீவுவாசிகள், வீடற்றவர்களாக இருந்தால், பிற குடிமக்களுடன் சமமான சட்ட உரிமைகள் மற்றும் ஆதரவை பெறுவதற்குத் தகுதியுடையவர்களாகும்.
ஆனால் வருகைக்கு முன்னர் தங்களுக்கேற்ப தங்குமிடம் ஏற்பாடு செய்யவேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலை, தற்போதைய நெருக்கடியை தீர்க்க வழிவகுக்கவில்லை என விமர்சனங்கள் எழுகின்றன.





