பிரான்ஸ் லூவ்ரே அருங்காட்சியகத்தில் திருட்டு – டெலிகிராம் நிறுவனர் கருத்தால் சர்ச்சை
பாரிஸ் லூவ்ரே அருங்காட்சியகத்தில் திருடப்பட்ட நெப்போலியன் காலத்து நகைகள் தொடர்பாக டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் தெரிவித்த கருத்தால் சர்ச்சையான நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் இருந்து பட்டப்பகலில் சுமார் 180 மில்லியன் யூரோ மதிப்புள்ள அரச நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளைச் சம்பவத்தைத் தொடர்ந்து, திருடப்பட்ட நகைகளை மீட்டு, அதை அருங்காட்சியகத்துக்கு மீண்டும் நன்கொடையாக வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு வழங்குவதில் தான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் தனது வலைதளப் பதிவில் தெரிவித்திருந்தார்.
எனினும், அந்தக் குறிப்பிட்ட நகைகளைப் பாரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்திற்கு அல்ல, மாறாக அபுதாபியில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்திற்குத் தான் வழங்குவேன் என்று அவர் குறிப்பிட்டார்.
இதன் மூலம், பாரிஸ் அருங்காட்சியகத்தில் உள்ள பாதுகாப்பை விட அபுதாபி லூவ்ரே அருங்காட்சியகத்தில் பாதுகாப்பு பலமாக உள்ளது எனப் பாவெல் துரோவ் சூசகமாகக் கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாவெல் துரோவின் இந்தக் கருத்தை இணையவாசிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அவரது கருத்தையடுத்து பாரிஸ் நகரில் பாதுகாப்பு இல்லையா? என்று கேள்வி எழுப்பி, இது பிரான்ஸின் பாதுகாப்பைக் குறைத்து மதிப்பிடுவதாக உள்ளது என்று தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.





