யாழில் ஜனாதிபதி அரைக்காற்சட்டையுடன் நடைப்பயிற்சி செய்கின்றார் என்பது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சி – சாணக்கியன்
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அரைக்காற்சட்டையுடன் நடைப்பயிற்சி செய்கின்றார் என்பது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியை தரும் செய்தியாக மாறிக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் சில விடயங்கள் காலம் கடந்தது தெளிவாக தெரியவரும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நியூ ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நந்தவனம் முதியோர் இல்லத்தில் ‘நந்தவனத்தில் ஓர் நாள்’என்னும் தொனிப்பொருளில் தைப்பொங்கல் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.
நியூ ஒலிம்பிக் விளையாட்டுக்கழகத்தின் கழக தலைவர் த.சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த சாணக்கியன்,
”களுவாஞ்சிகுடி பகுதியில் நான் பாராளுமன்ற உறுப்பினராக வந்தபிறகு என்னால் முடிந்த பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன்.
கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்த சில அரச அதிகாரிகளும் எமது வேலைத்திட்டத்திற்கு தடையாக இருந்தார்கள்.பல்வேறு வேலைத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் திருப்பி அனுப்பப்பட்ட நிலைமைகள் கடந்தகாலத்திலிருந்தது.
நாங்கள் இந்த மாவட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும். இந்த அரசாங்கத்தினைப்பொறுத்த வரையில் இந்த ஜனாதிபதி சிறிய காற்சட்டையினை போட்டுக்கொண்டு நடைப்பயிற்சிக்கு செல்கின்றார் என்பதும் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியை தரும் ஒரு செய்தியாக மாறிக்கொண்டிருக்கின்ற காலப்பகுதியில் சில விடயங்கள் எதிர் வரும் காலங்களில் எங்களுக்கு தெளிவாக தெரியவரும்.
இதேபோன்று இந்த களுவாஞ்சிகுடி பகுதியில் மாற்றுக்கட்சிகளிலிருந்து விமர்சிப்பவர்களிடம் ஒருவேண்டுகோளை முன்வைக்கின்றேன்.
நீங்கள் என்னை விமர்சிப்பதனால் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.முடிந்தளவு அனைவரும் இணைந்து பயணிக்க முன்வருமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.
இந்த நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மே.வினோராஜ், சிவஸ்ரீ.ர்பத்மநிலோஜ சர்மா குருக்கள் ,களுவாஞ்சிகுடி நகர தலைவர் அ.கந்தவேள், கழகத்தின் முக்கியஸ்தர்கள்,முதியோர் இல்ல நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.





