இலங்கை – பிள்ளையானை சந்திக்க வாய்ப்பு கேட்ட ரணிலின் கோரிக்கை நிராகரிப்பு!

தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப் புலனாய்வுத் துறையின் காவலில் உள்ள பிள்ளையானாகிய சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் பேசுவதற்கு ஒரு வாய்ப்பை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி குற்றப் புலனாய்வுத் துறையிடம் கோரியதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளை அழைத்து, உரிய வாய்ப்பை கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.
காவலில் உள்ள ஒரு சந்தேக நபருடன் தொலைபேசியில் பேசுவது சட்டவிரோதமானது என்பதால், அந்தக் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இருப்பினும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்து கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரின் வழக்கறிஞராகச் செயல்படும் திரு. உதய கம்மன்பில, குற்றப் புலனாய்வுத் துறையிடம் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க விரும்புவதாகக் கூறி கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, திரு. உதய கம்மன்பிலவுக்கு சமீபத்தில் குற்றப் புலனாய்வுத் துறைக்குச் சென்று பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் முன்னிலையிலும் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.