சம்பூரில் 120 மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி நிலையங்களை நிறுவ இலங்கை மற்றும் இந்தியா இடையே இணக்கம்

திருகோணமலை, சம்பூரில் மொத்தம் 120 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கு இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளது.
முதல் கட்டத்தில் 50 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி நிலையம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் 70 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் என இரண்டு கட்டங்களாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்த முயற்சியானது இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் இந்தியாவின் தேசிய அனல் மின் கூட்டுத்தாபனம் (NTPC) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக கட்டுமானம், உரிமை மற்றும் செயல்பாட்டு அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
சம்பூர் நிலக்கரி மின் திட்டத்திற்காக முதலில் உருவாக்கப்பட்ட CEB மற்றும் NTPC ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான Trincomalee Power Company Ltd மூலம் 50 MW சூரிய மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்படும். திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.