இலங்கை – வசிம் தாஜுதீனின் கொலை வழக்கில் கிடைத்த முக்கிய ஆதாரம்!
பிரபல ரக்பி வீரர் வசிம் தாஜுதீனின் கொலை வழக்கில் முக்கிய தகவல்களை குற்றப் புலனாய்வுத் துறை வெளிப்படுத்தியுள்ளது.
அதாவது தாஜுதீன் கொல்லப்படுவதற்கு சுமார் 20 நிமிடங்களுக்கு முன்பு அனுர விதானகமகே (கஜ்ஜா) என்பவர் அவரை பின்தொடர்ந்ததாக குற்றப்புலனாய்வு துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதி அவர் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலை சம்பவம் இடம்பெற்று ஏறக்குறைய 12 வருடங்களாகிறது. இருப்பினும் குற்றவாளி இனங்காணப்படவில்லை.
இந்நிலையில் அண்மையில் மித்தெனியவில் படுகொலை செய்யப்பட்ட கஜ்ஜா என்பவரின் மனைவி வழங்கிய வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து வசிம் தாஜுதீனின் கொலை வழக்கு மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய அப்போது கைப்பற்றப்பட்டிருந்த சிசிடிவி காணொளிகளை பரிசோதனை செய்த குற்றப்புலனாய்வுத் துறையினர் கஜ்ஜா என்று அழைக்கப்படும் குறித்த நபர் அவரை பின்தொடர்ந்து செல்வது தெரிவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தகவலை மேலும் உறுதிப்படுத்த விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.





