இலங்கையில் சூழ்ச்சிகளை ஏற்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது – ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையில் சூழ்ச்சிகளை ஏற்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே ஜனாதிபதி இதனை கூறினார் .
நாட்டில் அந்நிய முதலீடுகளும் ஏற்றுமதிகளும் அதிகரித்துள்ளதால் தொழில் வாய்ப்புகளும் பெருகி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்ற முற்பட்டுள்ளதால், நிதி கையிருப்புக்கு பாதிப்புகள் ஏற்படாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பொருளாதார ஸ்திரமான நிலையை நோக்கி நகர்ந்து வருவதால், சிலர் நாட்டில் குழப்ப நிலையை தோற்றுவிக்கும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், சூழ்ச்சிகளை ஏற்படுத்த முற்படுவர்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானமாக உள்ளதாகவும், புலனாய்வு துறையினர் கண்காணிப்புக்களை மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக ரீதியான அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க யாருக்கும் தடையில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். பொது மக்களை சந்திக்கவும், கூட்டங்களை நடத்தவும் எவ்வித தடைகளும் இல்லை என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.