பல தசாப்தங்களுக்குப் பிறகு முதல் சிவில் பாதுகாப்பு அமைச்சரை நியமனம் செய்த தென் கொரியாவின் லீ

தென்கொரியாவின் புதிய தற்காப்பு அமைச்சராக மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆன் கியூ-பேக்கை அந்நாட்டு அதிபர் லீ ஜே மியூங் திங்கட்கிழமை (ஜூன் 23) நியமித்தார்.
அந்நாட்டின் 64 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் ராணுவத்தில் அதிகாரியாகப் பணியாற்றாத ஒருவரைத் தற்காப்பு அமைச்சராக நியமிப்பது இதுவே முதல்முறை.இதன்மூலம், தேர்தல் பிரசாரத்தின்போது அந்நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை அதிபர் லீ நிறைவேற்றினார்.
ஜூன் 4ஆம் திகதி அதிபராகப் பதியேற்ற அவர், தற்காப்புத் துறையோடு சேர்த்து இதர பத்து துறைகளுக்கான அமைச்சர்களின் பெயர்களையும் வெளியிட்டார்.அமைச்சர்களின் நியமனத்திற்கு நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை என்றாலும் அவ்வப்போது சர்ச்சைக்குரிய விசாரணையின்போது மதிப்பாய்வு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்நாட்டின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோல் ராணுவச் சட்டத்தைத் திடீரென்று அமல்படுத்தினார்.ஆறு மணி நேரத்தில் அச்சட்டம் மீட்டுக்கொள்ளப்பட்ட போதிலும் தென்கொரிய ராணுவத்தின்மீது அந்நாட்டு மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை அச்சம்பவம் சற்று அசைத்துபார்த்தது.
யூனின் அமைச்சரவையில் தற்காப்பு அமைச்சராக இருந்த கிம் யோங்-ஹியூனிற்கு ராணுவச் சட்டத்தைப் பரிந்துரைத்ததிலும் அதனை அமல்படுத்தியதிலும் முக்கிய பங்கு இருப்பதாகக் கூறப்பட்டது.
இதற்கிடையே, மத்திய கிழக்கு வட்டாரங்களின் நிலைமை மிகவும் கவலையளிப்பதாகவும் அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மை காரணமாக நிதிச் சந்தைகள் நிலையற்றதாகி வருவதாகவும் அதிபர் லீ கூறினார்.
அதிபர் அலுவலகம் உட்பட அனைத்து அமைச்சுகளிலும் அவசரகாலத்தைத் திறம்பட கையாளத் தேவையான அமைப்பை உடனடியாக உருவாக்க வேண்டும் எனத் தான் எண்ணுவதாகத் திரு லீ தமது மூத்த செயலாளர்களிடம் கூறினார். மேலும், கச்சா எண்ணெய் விலை உயர்வு பணவீக்கத்தை அதிகரிக்க வழிவகுக்கும் அதே வேளையில் மக்களின் வாழ்வாதாரத்தையும் அது பாதிக்கும் என அவர் கவலை தெரிவித்தார்.