பிரிட்டனிடம் இழப்பீடு கோருமாறு சஜித் முன்மொழிவு: அரசு பச்சைக்கொடி!
“காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இலங்கைக்கு ஏற்பட்ட பொருளாதார ரீதியிலான இழப்புக்கு , இழப்பீடு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijith Herath தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர்
தலைமையில் கூடியது.
ஆரம்பக்கட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், வெளிவிவகார அமைச்சரிடம் எழுப்பட்டிருந்த கேள்விகளுக்கு விஜித ஹேரத் பதிலளித்தார்.
அவ்வேளையில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa மேற்படி விடயம் பற்றி அமைச்சரின் கவனத்தை ஈர்த்தார்.
“ சில ஆபிரிக்க நாடுகள் தங்களை குடியேற்ற நாடுகளாக மாற்றிய நாடுகளிடமிருந்து இழப்பீடு கோர முயற்சித்துவருகின்றன.
காலனித்துவ ஆட்சி காலத்தில் தமது நாட்டுக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்பு , சொத்து சேதங்கள், திருட்டுகள் தேசிய வளங்கள் கொள்ளை உள்ளிட்டவை தொடர்பிலேயே இழப்பீடு கோர முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது.
எனவே, இலங்கையும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.
இது தொடர்பில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூருக்கு அனுபவம் இருப்பதால், அவர்போன்றவர்களிடம் ஆலோசனைப் பெறலாம்.
காலனித்துவ ஆட்சிகாலத்தில் இலங்கைக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பிலும் நாமும் இழப்பீடு கோரலாம்.” என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,
“எதிர்க்கட்சி தலைவர் முக்கிய விடயமொன்றை சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. எனவே, பொருளாதார ரீதியிலும் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு பெறுவதற்கு முயற்சி எடுக்கப்படும்.”- என்றார்.




