நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து சஜித் விடுத்துள்ள அறிவிப்பு!
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கைவிடப்படவில்லை. அது நிச்சயம் கொண்டுவரப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச Sajith Premadasa இன்று (20) அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கான நேரம் மற்றும் பொருத்தமான சந்தர்ப்பம் என்பவற்றை எதிர்க்கட்சியே தீர்மானிக்கும்.
இது விடயத்தில் அரசாங்கம் முடிவெடுக்க முடியாது. அரசாங்கம் கூறும் நேரங்களில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர நாம் தயார் இல்லை .
நம்பிக்கையில்லாப் பிரேரணை முறையாகவும், சரியான நேரத்திலும் தேவையான கையொப்பங்களைப் பெற்றதன் பின்னர் நாம் சமர்ப்பிப்போம்.
முடிந்தால் மூன்று நாட்கள் கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதத்தை நாளை முதலே நடத்துமாறு அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையிலான அரசாங்கத்திற்கு நாம் சவால் விடுக்கிறோம்.” – என்றார் சஜித்.





