தொலைத்தொடர்பு கேபிள்களை சேதமாக்க வேண்டாம் : பொதுமக்களிடம் கோரிக்கை
நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்பு சேவையை மீட்டெடுக்க ஒத்துழைக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவந்த சீரற்ற காலநிலையால் ஒரு சில பகுதிகளில் நிலத்தடியிலிருந்த தொலைத்தொடர்பு கேபிள்கள் வெளிப்பட்டுள்ளன.
அவ்வாறு நிலத்திலிருந்து வெளியே தெரிந்த தொலைத்தொடர்பு கேபிள்களை சேதப்படுத்தல், அறுத்து எடுத்துச் செல்லுதல் போன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இத்தகைய சம்பவங்களை தவிர்ப்பதற்கு, பொதுமக்களுக்கு இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்துமாறு டயலொக் ஆசியாடா நிறுவனம் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அனர்த்தங்களுக்குப் பின்னர் சேதமடைந்த வீதிகளை புனரமைக்கும் போது, நிலத்தடியிலிருந்த தொலைதொடர்பு கேபிள்களும் சேதமடைந்துள்ளதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் தகவல் தொடர்பு சேவைகளை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்பட்டுள்ள தொலைத்தொடர்பு கேபிள்களுக்கு சேதம் விளைவித்தல், அவற்றை அறுத்து எடுத்துச் செல்லுதல், அல்லது உடைமையாக வைத்திருத்தல் ஆகியன தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற செயற்பாடுகள் குறித்து ஏதேனும் தகவல் அறிந்திருப்பின் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிப்பது அவசியம்.
மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீதிகளை மீண்டும் புனரமைக்கும் போது நிலத்தடியிலிருந்து தொலைதொடர்பு கேபிள்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்தால், அதை சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தெரிவிக்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கிறோம். இது பாதிக்கப்பட்ட தொடர்பு சேவைகளை விரைவாகவும் மீட்டெடுக்க உதவும் என்றார்.





