இஷாரா செவ்வந்தியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை வழக்குடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகள் தொடர்பான அறிக்கை இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இஷாரா செவ்வந்தி தற்போது 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் அவருக்கு ஆதரவளித்த இருவரும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் முன்னேற்றம் உடனடியாக அறிவிக்கப்படும் என்று காவல்துறையினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்திருந்தனர். அதற்கமைய விசாரணை தொடர்பான முதலாவது அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வழங்கப்பட்ட தகவல்களைக் கருத்தில் கொண்ட நீதவான், விசாரணையின் முன்னேற்றத்தை தொடர்ந்து தெரிவிக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பிப்பித்துள்ளார்.
அத்துடன் சந்தேக நபரின் கண்காணிப்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் கையாளப்படும் என்றும் நீதிமன்றம் காவல்துறையினருக்கு தெரிவித்தது.
இதன்போது இஷாராவிற்கு உதவி செய்த இருவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் இந்த இரண்டு நபர்களும் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளார்களா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த காவல்துறையினர், கொலையில் அவர்கள் சந்தேக நபர்களாக பெயரிடப்படவில்லை என்றும், ஆனால் செவ்வந்திக்கு உதவி செய்தமை மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் அவர்களின் ஈடுபாடு குறித்து விசாரிக்கப்படுவதாகவும் தெளிவுபடுத்தினர்.
தற்போதைய வழக்கு கோப்பின் கீழ் அந்த இரண்டு நபர்களைப் பற்றியும் உத்தரவுகளை பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று கூறிய நீதிபதி அவர்கள் தொடர்பான உண்மைகளை முன்வைக்க தனி பி-அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தினார்.
அத்தகைய முறையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன், நீதிமன்றம் தொடர்புடைய உத்தரவுகளை பிறப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று நீதிபதி மேலும் குறிப்பிட்டார்.