மாகாணசபைத் தேர்தல்: அரசின் யோசனைக்கு எதிரணி முழு ஆதரவு!
மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்துவதற்குரிய யோசனையை அரசாங்கம் முன்வைத்தால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று அறிவித்தது.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜே.சீ. அலவத்துவல இவ்வாறு அறிவித்தார்.
“ மாகாணசபைகளில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லை. ஆளுநர்கள் ஊடாகவே அவை நிர்வகிக்கப்படுகின்றன. மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது தவறு என்பதை நாம் ஏற்கின்றோம். அன்று தவறு நடந்துள்ளது. எனினும், அது சரிசெய்யப்பட வேண்டும்.
பழைய முறைமையின்கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம். இதற்காக சாணக்கியன் எம்.பி. முன்வைத்துள்ள தனிநபர் சட்டமூலத்தை அரசாங்கம் தமது சட்டமூலமாக கொண்டுவந்து இதற்குரிய நடவடிக்கை எடுக்கலாம். நாம் அதற்கு முழு ஆதரவை வழங்குவோம்.” எனவும் ஜே.சீ. அலவத்துவல குறிப்பிட்டார்.





