காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி யாழில் போராட்டம்!
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாவதைத் தவிர்த்து வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தொடர்பான விவரங்களை வெளிப்படுத்தக் கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
வழக்கு விசாரணைக்காக யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
எனினும், வழக்கு விசாரணைக்காக யாழ்ப்பாணம் வருகை தருகின்றமைக்குத் தனக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து, இணைய வழியில் சாட்சியம் அளிக்கத் தயார் என மன்றுக்குக் கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
கோட்டாபய ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு ஜனாதிபதி தேர்தல் காலங்களிலும், அதன் பின்னர் ஜனாதிபதியான பின்னரும் யாழ்ப்பாணம் வந்து சென்ற நிலையில் வழக்கு விசாரணைக்காக வருகின்றமையைத் தவிர்க்கின்றார் என்று வழக்குத் தொடுநர் தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் சுட்டிக்காட்டி இருந்தனர்.
அதனால், மன்று கோட்டாபய ராஜபக்ஷவுக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் சத்தியக் கடதாசி ஊடாக மன்றுக்குத் தெரிவிக்குமாறு கட்டளையிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதிலும் கோட்டபாய ராஜபக்ஷ மன்றில் முன்னிலையாகவில்லை.
அதனையடுத்து இரு தரப்பு சட்டத்தரணிகளும் எழுத்து மூல சமர்ப்பணங்களைச் செய்யுமாறு மன்று கட்டளையிட்டு, வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 6ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தைத் தொடர்ச்சியாகப் புறக்கணிக்கின்றமைக்கு எதிராகவும், அனைத்துக் காணாமல் ஆக்கப்படல்களுக்கும் நீதியை நிலைநாட்டுமாறு கோரியும் நேற்று யாழ். நகரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், செம்மணியை மீண்டும் புதைக்க இடமளியோம், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய், மேலதிக அடக்குமுறைச் சட்டங்கள் வேண்டாம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கு, அனைத்து இன மக்களுக்கும் சமவுரிமையை உறுதி செய்யும் புதிய அரசமைப்பை வென்றெடுப்போம் எனக் கோஷங்கள் எழுப்பப்பட்டன.





