கிவுல் ஓயா திட்டத்திற்கான எதிர்ப்பு போராட்டம்- பெருந்திரளான மக்கள் பங்கேற்பு
கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (02) நெடுங்கேணியில் முன்னெடுக்கப்பட்ட நிலையில்
பெருந்திரளான மக்கள் பங்கேற்றிருந்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த தமிழ் தேசிய கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு போராட்டம் காலை 10.30 க்கு நெடுங்கேணி பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகியது.
திட்டத்திற்கு எதிரான பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி நெடுங்கேணி பிரதேச செயலாளரை சந்தித்து பாராளுமன்ற உறுப்பினர் இரா.சணக்கியன் மகஜர் ஒன்றை கையளித்தார்.
“கிவுல் ஓயா திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும், இது சிறிய போராட்டமே, எனினும் அரசாங்கம் இந்த திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால் பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என சாணக்கியன் நெடுங்கேணி பிரதேச செயலாளரிடம் வலியுறுத்தினார்.
இந்த எதிர்ப்புக் குரலை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் நெடுங்கேணி பிரதேச செயலாளரிடம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய காட்சிகளை சேர்ந்த எம்.ஏ. சுமந்திரன், சி.வி.கே. சிவஞானம், சுரேஸ் பிரேமச்சந்திரன், க. துளசி, மு. சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர்களான ப. சத்தியலிங்கம், சி. சிறிதரன், து. ரவிகரன், இ. சாணக்கியன்,செல்வம் அடைக்கலநாதன் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என நூற்றக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக 2023 ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்ட கிவுல் ஓயா (Kiul Oya) அபிவிருத்தித் திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்காக ஏற்கனவே மதிப்பிடப்பட்ட செலவு ரூ . 23,456 மில்லியன் ஆக திருத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி 2026 முதல் 2031 ஆம் ஆண்டிற்குள் பணிகளை முடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழர்களுக்கு சொந்தமான சுமார்13000 ஏக்கரிற்கும் அதிகமான நிலப்பரப்பினை அழித்து மணலாறு பிரதேசத்தில் குடியமர்த்தப்பட்ட 4000 சிங்கள குடும்பங்களுக்கு நீர் வழங்க இத் திட்டம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.






