சிறுமியை வெளிநாட்டுக்கு அனுப்பிய இலங்கையருக்கு கடூழிய சிறைத்தண்டனை
இலங்கையில் போலி ஆவணங்கள் மூலம் சிறுமியை வெளிநாட்டுக்கு அனுப்பியவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போலி பிறப்புச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளைத் தயாரித்து, சிறுமியொருவரை ஜோர்தானுக்கு பணிப்பெண்ணாக முகவர் ஒருவர் அனுப்பியுள்ளார்.
அவருக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய தினம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், குறித்த நபருக்கு 25,000 ரூபாய் அபராதத்தையும் மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க விதித்துள்ளார்.
அதேநேரம், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு மூன்று இலட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்ட நீதிபதி, அவற்றை செலுத்தாவிடின் மேலும் 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தமது தீர்ப்பில் அறிவித்தார்.





