92 வயதில் மீண்டும் ஜனாதிபதியான பால் பியா(Paul Biya) ; கேமரூனில்(Cameroon) வெடித்த போராட்டங்கள்
ஆப்ரிக்க நாடான கேமரூனில்(Cameroon), உலகின் மிக வயதான அரச தலைவரான பால் பியா(Paul Biya), தனது 92 ஆவது வயதில், எட்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
எனினும், இந்தத் தேர்தல் முடிவை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டங்களில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
கடந்த 1982 ஆம் ஆண்டு முதல் காமரூனை இரும்புக்கரம் கொண்டு ஆண்டு வரும் பால் பியா, 43 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கிறார். இந்த வெற்றியின் மூலம், அவர் தனது 100 ஆவது வயது வரையிலும் பதவியில் நீடிக்க வாய்ப்புள்ளது.
நாட்டின் அரசியலமைப்பு சபை அறிவித்த அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி, பால் பியா 53.66% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பியாவின் முன்னாள் கூட்டாளியும் முக்கிய எதிர்க்கட்சி சவாலுமான இசா ச்சிரோமா பக்காரி (Issa Tchiroma Bakary), தேர்தல் முடிவை ‘வேடிக்கை’ என்று கூறி நிராகரித்தார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே, ச்சிரோமாவின் ஆதரவாளர்கள் நாட்டின் வர்த்தக தலைநகரான டௌலா(Douala) உள்ளிட்ட பல நகரங்களில் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
இந்த மோதல்களில் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலில் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் இணையச் சேவைகள் முடக்கப்பட்டதால், பதற்றம் அதிகரித்துள்ளது.





