‘ஒபாமாகேர்’ திட்டம் முடிவுக்கு வருகிறது – அமெரிக்கர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
அமெரிக்காவில் ஒபாமாகேர் காப்பீட்டுத் திட்டத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதற்கான மானியம் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடியரசுக் கட்சியும் ஜனநாயகக் கட்சியும் போட்டி போட்டு செயல்படுவதால் அந்தக் காப்பீட்டுத் திட்டத்திற்கான மானியத்தை நீட்டிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இரு கட்சிகளும் ஒன்று மற்றொன்றுக்குப் போட்டியாக உத்தேச திட்டங்களை தாக்கல் செய்தன. ஆனால் இரு திட்டங்களையும் இரு கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் நிராகரித்துள்ளனர். இதனால் ஒபாமாகேர் திட்டத்திற்கான மத்திய அரசாங்கத்தின் மானியம் 2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதியுடன் காலவதியாக உள்ளது.
இதன் காரணமாக 24 மில்லியன் அமெரிக்கர்கள் காப்புறுதிக்கான தவணையை அதிகம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பிரதிநிதிகள் சபை, அடுத்த வாரம் இதுகுறித்து சட்டமொன்றை நிறைவேற்ற முயற்சி செய்யலாம். ஆனால் அதுகுறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை. அப்படி நிறைவேற்றப்பட்டாலும், செனட் சபையின் ஜனநாயகக் கட்சியினரும் சில குடியரசுக் கட்சியினரும் அதனை எதிர்க்கலாம். அந்த முயற்சியைத் தடுக்க அவர்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தலாம் என்று சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இரு கட்சிகளுக்கு இடையே நடைபெறும் போட்டாபோட்டியால் சில அமெரிக்கர்களுக்கு மத்திய சுகாதாரத் திட்டத்தின் கீழ் தங்கள் சுகாதாரக் காப்பீட்டைப் புதுப்பிப்பதில் நிச்சயமற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.





