சர்ச்சைக்குரிய பூர்வீக குடியேற்றச் சட்டத்தை நிராகரித்த நியூசிலாந்து நாடாளுமன்றம்

நியூசிலாந்து உருவாவதற்கு அடிப்படையாக இருக்கும் ஒப்பந்தத்தை மாற்றக்கூடிய மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்துள்ளது.
‘மவ்ரி’ என்றழைக்கப்படும் நியூசிலாந்தின் பழங்குடி மக்கள் சம்பந்தப்பட்ட அந்த சட்ட மசோதாவை எதிர்த்துப் பல மாதங்களாக ஆர்ப்பாட்டங்களும் விவாதங்களும் நடந்துவந்தன. அதனைத் தொடர்ந்து நியூசிலாந்து நாடாளுமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
வைத்தாங்கி ஒப்பந்தம் எனப்படும் ஒப்பந்தம் முதன்முதலில் 1840ஆம் ஆண்டு கையெழுத்தானது. பிரிட்டிஷ் அரச குடும்பமும் 500க்கும் மேற்பட்ட மவ்ரி தலைவர்களும் அதில் கையெழுத்திட்டனர்.
இரு தரப்பும் எவ்வாறு ஆட்சி புரியவேண்டும் என்பதை அந்த ஒப்பந்தம் விவரிக்கிறது. அதில் இடம்பெறும் அம்சங்களை மையமாகக் கொண்டே இன்றும் நியூசிலாந்தின் சட்டங்கள் வரையப்படுகின்றன.
அந்த அம்சங்களை மாறுபடச் செய்யும் ஒப்பந்த அம்சங்கள் மசோதாவை டேவிட் சீமோரின் ஏசிடி நியூசுலாந்துக் கட்சி முன்வைத்திருந்தது. வைத்தாங்கி ஒப்பந்தத்தில் இடம்பெறும் அம்சங்களை நன்கு விளக்கி கூடுதல் தெளிவு அளிப்பதுடன் அரசமைப்புச் சட்டத்தில் அது வகிக்கும் பங்கு தொடர்பிலான விவாதங்களை ஊக்குவிப்பது ஒப்பந்த அம்சங்கள் மசோதாவின் நோக்கம் என்றார் சீமோர்.
இரண்டாம் வாசிப்பைத் தாண்ட அந்த மசோதா, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவேண்டும். ஆனால், நாடாளுமன்றத்தில் அதற்கு எதிராக 112 வாக்குகள் கிடைத்தன; 11 வாக்குகள் மட்டுமே சாதகமாக இருந்தன