தெற்கு அரசியலில் புது வியூகம்: சஜித், ரணில் விரைவில் நேரடி சந்திப்பு!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் விரைவில் நேரடி சந்திப்பு நடைபெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒன்றிணைந்து பயணிப்பது தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் வகையிலேயே இதற்குரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரு கட்சிகளிலும் உள்ள மூத்த உறுப்பினர்களின் தலையீட்டையடுத்தே நேரடி சந்திப்புக்குரிய ஏற்பாடு இடம்பெற்றுவருவதாக தெரியவருகின்றது.
இணைந்து பயணிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக இரு கட்சிகளில் இருந்தும் பேச்சு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அக்குழுக்கள் சந்தித்து பலதடவைகள் பேச்சு நடத்தின.
இணைந்து பயணிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டாலும் தனிக்கட்சியாக இணைவதா அல்லது கூட்டணியாக செல்வதா என்பது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அக்கட்சியின் தலைமைப் பதவியை சஜித் பிரேமதாச பெற வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பொது கூட்டணியாக ரணிலும், சஜித்தும் இணைத்தலைமை பதவி வகிக்க வேண்டும் என்ற மற்றுமொரு யோசனையும் உள்ளது.
” சஜித் தலைவர், ரணில் உயர்மட்ட ஆலோசனை தலைவர்” என்ற பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இவ்விவகாரம் தொடர்பில் இறுதியான – உறுதியான முடிவை எடுப்பதற்காக இரு கட்சிகளினதும் தலைவர்களை நேரடியாக சந்திக்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





