08 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மகாவலி ஆற்றின் சில நீரேந்து பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் அடுத்த 48 மணித்தியாலங்களில் மகாவலி ஆற்றின் ஓரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய கின்னியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிகந்த, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மட்டக்களப்பு பொலன்னறுவை வீதி (கல்லெல்ல பகுதி), சோமாவதிய ரஜ மகா விஹாரைக்கான அணுகல் பாதை மற்றும் சோமாவதிய ரஜ மகா விஹாரையைச் சுற்றியுள்ள பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, சோமாவதிய ரஜ மகா விஹாரைக்குச் செல்லும் பக்தர்கள் அடுத்த சில நாட்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை அந்தப் பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அத்துடன் மேற்கூறிய பகுதிகளில் மகாவலி ஆற்றுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ள நிலைமைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.





