‘மத்திய கிழக்கு போர்’ – இலங்கை சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கம்!
இலங்கைக்கு கடந்த 22 நாட்களுக்குள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 89 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
மார்ச் 1 முதல் 22 வரையான காலப்பகுதியிலேயே இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி காலப்பகுதிக்குள் இந்தியாவில் இருந்து 35 ஆயிரத்து 330 பேரும், பிரிட்டனில் இருந்து 12 ஆயிரத்து 599 பேரும், ரஷ்யாவில் இருந்து 11 ஆயிரத்து 927 பேரும் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
கடந்த வருடம் 23 லட்சத்து 62 ஆயிரத்து 521 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் 5 லட்சத்து 5 ஆயிரத்து 751 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
கடந்த மாதம் இலங்கைக்கு 2 லட்சத்து 79 ஆயிரத்து 328 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர்.
எனினும், மத்திய கிழக்கு போர்ச்சூழல் மற்றும் விமான போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை ஓரளவு குறைவடைந்துள்ளது என்பதை தரவுகள் காண்பிக்கின்றன.
அதேவேளை, இலங்கைவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு இலங்கை உரிய ஏற்பாடுகளை செய்துள்ளது. தடையின்றி எரிபொருள் உள்ளிட்டவற்றை பெறுவதற்குரிய திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டுள்ளன.





