திருமண மோசடி வழக்கு – முதல் மனைவியுடன் வந்தார் மாதம்பட்டி ரங்கராஜ்

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக ஜாய் கிரிசில்டா தொடர்ந்துள்ள வழக்கு இன்று மகளிர் ஆணையத்தில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது மாதம்பட்டி ரங்கராஜ் நேரில் ஆஜரானதுடன், தனது முதல் மனைவியையும் உடன் அழைத்து வந்திருந்தார்.
இதேவேளை, குறித்த விசாரணைகளுக்காக முறைப்பாட்டை அளித்த நிறைமாத கர்ப்பிணியான ஜாய் கிரிசில்டாவும் வருகைத்தந்திருந்தார்.
இதேவேளை, ஜாய் கிரிசில்டா முன்வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களுக்கு இதுவரை காலமும் மௌனம் காத்து வந்த மாதம்பட்டி ரங்கராஜ் நேற்று முதன்முறையாக தனது முகநூல் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“நீதிமன்றத்திற்கு வெளியே ஜாய் கிரிசில்டா எழுப்பிய தற்போதைய சர்ச்சையைத் தீர்த்து வைக்குமாறு பல நபர்கள் என்னை அணுகி வருகின்றனர்.
நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதையும், சட்டத்தின்படி உண்மை நிலைநாட்டப்படும். இந்த சர்ச்சையைத் தீர்க்க நான் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளேன் என்பதையும் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறேன்.
இந்தப் பிரச்னை தொடர்பான எந்தவொரு ஊடக விசாரணையிலோ அல்லது பொது விவாதத்திலோ ஈடுபடவோ, ஊக்குவிக்கவோ அல்லது பதிலளிக்கவோ நான் விரும்பவில்லை.
ஆன்லைன் ஊடகங்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நடந்து வரும் சர்ச்சை குறித்து எந்த கருத்துகளையும், அனுமானங்களையும் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து ஊடக நிறுவனங்களையும் நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நான் இந்த சர்ச்சையை சட்டத்தின்படி எதிர்கொள்வேன். ஜாய் கிரிசில்டா எதிர்பார்ப்பது போல்நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண ஒப்புக்கொள்ள மாட்டேன்.
எனது நலனில் அக்கறை காட்டி, எனக்கு உறுதுணையாக இருந்து, ஆதரவு மற்றும் பிரார்த்தனைகள் வழங்கிய அனைத்து நலன்விரும்பிகளுக்கும், எனது இதயபூர்வமான நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.