லண்டன் இலக்கு? ஈரானிய ஏவுகணைகள் குறித்த தகவலை பிரிட்டிஷ் அரசு நிராகரித்தது
லண்டனைத் தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர ஏவுகணைகள் ஈரானிடம் இருப்பதாக இஸ்ரேல் கூறிய நிலையில், பிரித்தானியாவின் வீட்டுவசதித் துறை செயலாளர் ஸ்டீவ் ரீட் (Steve Reed) அதனை மறுத்துள்ளார்.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) சனிக்கிழமை வெளியிட்ட தகவலின்படி, ஈரானிடம் 4,000 கிலோமீற்றர் வரை சென்றடையக்கூடிய ஏவுகணைகள் உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், இதனை உறுதிப்படுத்த எந்தவொரு மதிப்பீடும் இல்லை என்றும், ஈரான் பிரித்தானியாவை இலக்குவைத்துள்ள அல்லது அத்தகைய திறன் கொண்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டும் ஆதாரங்கள் இல்லை என்றும் ஸ்டீவ் ரீட் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஈரானிலிருந்து சுமார் 3,800 கிலோமீற்றர் தொலைவில், இந்தியப் பெருங்கடலில் உள்ள சாகோஸ் தீவுகள் (Chagos Islands) பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க-இங்கிலாந்து கூட்டு இராணுவத் தளம் குறிவைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏவுகணைகள் பிரிட்டிஷ் பகுதிக்கு எவ்வளவு அருகில் வந்தன என்பதைக் குறித்து கருத்து தெரிவிக்க ஸ்டீவ் ரீட் மறுத்ததுடன், அதுபற்றிய “செயல்பாட்டு விபரங்களை” பகிர முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.





