கரூர் கூட்ட நெரிசல் வழக்கு – நேரில் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன்
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
கடந்த ஆண்டு செப்டெம்பர் 27 ஆம் திகதி கரூரில் விஜய் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இதற்கு முன்பாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் புதுடெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர்.
இவர்களோடு, தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கே.பி. மதியழகன், எம்.சி. பவுன்ராஜ் ஆகியோரும் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர். சிபிஐ அதிகாரிகளின் பல்வேறு கேள்விகளுக்கு இவர்கள் பதில் அளித்தனர்.
இதேபோல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 04ஆம் திகதி கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலும் சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராகி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரிடம் அப்போது இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
அதில், ஜனவரி மாதம் 12 ஆம் திகதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விஜய்யிடம் விசாரணை நடத்தப்பட்டு அதன் பிறகு, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சிபிஐ திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதென இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.





