அரசியல் புயலில் சிக்கிய “ஜனநாயகன்”!
நடிகர் விஜய் அரசியல் களம் புகுந்துள்ள நிலையில், அவர் நடித்துள்ள கடைசி படம் அரசியல் புயலில் சிக்கியுள்ளது.
தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் நடித்துள்ள
‘ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (9) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
எனினும், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் காரணமாக தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இந்த படத்தை மறுஆய்வுக் குழு பார்ப்பதாக தணிக்கை குழு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ விவகாரத்தை தேவையில்லாமல் விஜய் பெரிதாக்குவதாக சபாநாயகர் அப்பாவு சாடியுள்ளார்.
நெல்லையில் இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு,
“ ஜனநாயகன் தனது கடைசி படம் என்பதால் விஜய் பில்டப் செய்கிறார். ரசிகர்களை கொதிநிலையில் வைத்திருக்க இந்த பில்டப் செய்யப்படுகிறது.
ஆந்திராவில் சினிமா படம் பார்க்கச் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அந்த விவகாரத்தில் சினிமா நடிகர் கைது செய்யப்பட்டார்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகியுள்ளனர். எனவே சட்டம் தனது கடமையைச் செய்யும்” என்றார்.
அதேவேளை, விஜய்க்கு ஆதரவாக சில அரசியல் பிரமுகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.





