யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி கோலாகலமாக ஆரம்பம்
வடக்கு மாகாணத்தின் பொருளாதார உந்துசக்தியாகக் கருதப்படும் ‘யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி – 2026’ இன்று 16-வது ஆண்டாக யாழ்ப்பாணத்தில் மிகச் சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் நடைபெற்ற தொடக்க விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாணத்தை இலங்கைப் பொருளாதாரத்தின் வர்த்தக உந்துசக்தியாக முன்னிறுத்துவதே எமது கூட்டு இலக்கு எனத் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் வடக்கில் மூன்று புதிய முதலீட்டு வலயங்களை நிறுவுவதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எம் மாகாண இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும் எனவும் பகிரங்க அழைப்பு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, யாழ். முற்றவெளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள 400-க்கும் மேற்பட்ட காட்சிக்கூடங்களை ஆளுநர் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

விவசாயம், கடற்றொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பம் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த தயாரிப்புகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி மற்றும் அரச, தனியார் துறைப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.





