ஏவுகணைகள்,ட்ரோன்கள் மூலம் ஈரான் போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை (ஜூன் 23) இரவு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவித்தார்.இதனால் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்துவந்த 12 நாள் போர் முடிவுக்கு வந்தது. போர் நிறுத்த உடன்பாட்டின் படி இருநாடுகளும் தாக்குதல்களில் ஈடுபடக்கூடாது.
இந்நிலையில், ஈரான் அடுத்தடுத்து பல ஏவுகணைகளை இஸ்ரேலுக்குள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 24) பாய்ச்சியதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.தலைநகர் டெல் அவிவ், இஸ்ரேலின் தென்பகுதியில் உள்ள பீர்ஷெபா பகுதிகளில் கடுமையான வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
ஏவுகணைகளால் பீர்ஷெபா பகுதியில் மூவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.ஈரான் ஆறு முறை அடுக்கடுக்கான ஏவுகணைகளைத் தங்கள் வான்பகுதியில் பாய்ச்சியதாகவும் அது தெரிவித்தது.“அதிபர் டிரம்ப் ஏற்பாடு செய்த உடன்பாட்டின்படி ஈரான் இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தாதவரை இஸ்ரேல் ஈரானைத் தாக்காது,” என்று வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி கூறினார்.
இந்நிலையில், ஈரானுக்குப் பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மத்தியக் கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
டெஹ்ரான் போர் நிறுத்த உடன்பாட்டிற்கு ஒப்புக்கொண்டதாக ஈரானின் மூத்த அதிகாரி கூறியுள்ளார். ஆனால் ஈரானின் வெளியுறவு அமைச்சு, இஸ்ரேல் முழுமையாக அதன் தாக்குதல்களை நிறுத்தும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று எச்சரிக்கைவிடுத்துள்ளது.
போர் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்வதற்குச் சிலமணி நேரத்திற்கு முன்னர் ஈரான் சில ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக அந்நாட்டின் எஸ்என்என் ஊடகம் கூறியுள்ளது.
கடந்த வாரயிறுதியில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான்மீது தாக்குதல் நடத்தியது. குறிப்பாக அமெரிக்கா ஈரானின் அணுவாயுதக் கூடங்களில் குண்டு மழை பொழிந்தது.ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிப்பதாக இஸ்ரேலும் அமெரிக்காவும் குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால் அதை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.“நாங்கள் அணுவாயுதங்களைத் தயாரிக்க முடிவெடுத்துவிட்டால் அதை யாரும் நிறுத்த முடியாது”, என்று ஈரானின் தலைவர் அலி காமேனி தெரிவித்துள்ளார்.