புலம்பெயர்ந்தோர் மீது கடுமையான அடக்குமுறையை பிரயோகிக்கும் ஈரான்!
ஈரானிய அரசாங்கம் புலம்பெயர்ந்தோர் மீது கடுமையான அடக்குமுறையை தொடர்வதால் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாக ஆப்கானிஸ்தான் அகதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 1.5 மில்லியன் ஆப்கானிஸ்தானியர்களை ஈரான் நாடு கடத்தியுள்ளது. அவர்களுக்கு இடமளிக்கும் வகையில் போதுமான வளங்கள் தங்கள் கைவசம் இல்லை என தெஹ்ரான் குறிப்பிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறினர்.
தலிபான் அரசாங்கத்தின் கடுமையான பழிவாங்கல்கள் மற்றும் அடக்குமுறைக்கு அஞ்சி அகதிகள் பாகிஸ்தான், துருக்கி , ஈரானிலும் புகலிடம் தேடினர். இருப்பினும், பாகிஸ்தான் மற்றும் ஈரானில் வசிக்கும் ஆப்கானியர்கள் தாயகம் திரும்ப அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.
புலம்பெயர்ந்தோருக்கு எந்த வேலையும் வழங்கப்படக்கூடாது என்று ஈரானிய அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும், புலம்பெயர்ந்தோரின் குழந்தைகள் இனி பாடசாலைகளில் சேர்க்கப்பட மாட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளதாகவும் அங்கு வாழும் அகதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் புலம்பெயர்ந்தோரின் வங்கி அட்டைகள் மற்றும் சிம் கார்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




