அமெரிக்கா உடனான இந்திய வர்த்தக ஒப்பந்தம் புதிய அத்தியாயம்
இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் இரு தரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கத் தலைநகரில் நடைபெற்ற அரிய வகை கனிமங்கள் தொடர்பான 50 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், மாநாட்டின் இடையே அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசென்ட், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோரை சந்தித்துள்ளார்.
இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அறிவிப்பை அடுத்து இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், ‘‘எனது அமெரிக்கப் பயணம் பயனுள்ளதாகவும், நேர்மறையானதாகவும் இருந்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், அதன் விபரங்களை இறுதி செய்யும் கட்டத்தில் உள்ளது. அது விரைவில் நிறைவடையும். இது நமது இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தைத் திறக்கிறது. மேலும், பரந்த சாத்தியக்கூறுகளை வழங்குகிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.
அரிய வகை கனிமங்கள் குறித்துப் பேசிய ஜெய்சங்கர், ‘‘அரிய வகை கனிமங்கள் மீதான நமது ஒத்துழைப்பும் வேகமாக முன்னேறி வருகிறது. வரும் நாட்களில், இரு தரப்பு பிரச்சினைகள், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி சார்ந்த பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தைகளை எதிர்பார்க்கிறோம். ஒட்டுமொத்தமாக ஒரு வலுடான உத்வேகம் தெளிவாகத் தெரிகிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பு முதல் விமானங்கள் தயாரிப்பு வரை பயன்படும் அரிய வகை கனிமங்களை தற்போது சீனாதான் அதிக அளவில் உற்பத்தி செய்து வருகிறது. உலக அளவிலான விநியோத்தில் சீனாவின் பங்கு 60 சதவீதத்தை சீனா கொண்டுள்ளது.
இந்நிலையில், சீனாவுக்குப் போட்டியாக அரிய வகை கனிமங்களின் உற்பத்தி, விலை, உலக சங்கிலி ஆகியவற்றை தீர்மானிப்பது தொடர்பாக அமெரிக்கா இந்த மாநாட்டுக்கு ஏற்பாடுகளை செய்திருந்தது.
இதில், இந்தியா உட்பட 50 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




