நீண்டகால பிரச்சினையை தீர்க்க இந்திய – இலங்கை அரசாங்கங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – சஜித்!
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே நீண்டகாலமாக மீன்பிடித் தகராறு இருந்து வருவதாகவும், சர்வதேச சட்டத்தின்படி செயல்படுத்தக்கூடிய நிரந்தரத் தீர்வைக் காண இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
தற்போது இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ‘இந்தோ-இலங்கை இருதரப்பு உறவுகள்’ என்ற தலைப்பில் ANI செய்தி நிறுவனத்துடன் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றபோது இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்டம் தொடர்பான மாநாடு (UNCLOS) இருக்கிறது.
இரு தரப்பினரும் இணைந்து சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி தொடர்புடைய சட்டங்களை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சட்டவிரோத மீன்பிடித்தலைத் தடுக்க, தொடர்புடைய சட்ட விதிகளின்படி இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதை இரு நாடுகளும் உறுதி செய்வது முக்கியம் என்றும் கூறினார்.
கச்சத்தீவு அருகே இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் நுழைவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சினைகள் இருப்பதாகவும், இது பெரும்பாலும் கைதுகள் மற்றும் கடல் எல்லைகள் தொடர்பான சர்ச்சைகளுக்கு வழிவகுப்பதாகவும் சுட்டிக்காட்டிள்ளார்.





