பேரிடரால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு எவ்வளவு? புள்ளி விபரம் கோருகிறது ஐதேக!
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்வாறு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்கப்படும் என்பன தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவே இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து வெளியிட்ட அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
“ 6 ஆயிரம் வீடுகள் முழுமையாக சேதமடைந்திருந்தால் 6 ஆயிரம் கோடி ரூபா வழங்கப்பட வேண்டும். இது எவ்வாறு கையளிக்கப்படும்?
பகுதியளவு சேதமடைந்த வீடுகள் என்பது எவ்வாறு கண்டறியப்படும்? ரீ பில்டிங் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துக்கு கிடைக்கப்பெறும் நிதி மூலம் இதனை செய்ய முடியுமா?
நாடாளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி கூடும்போது இது பற்றி தெளிவுபடுத்த வேண்டும். அப்போதுதான் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.
பேரிடரால் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பான தகவல்களும் எமக்கு அவசியம்.
சுனாமியின்போது இதைவிடவும் கூடுதல் வீடுகள் சேதமடைந்தன.
ரணில் மற்றும் மஹிந்த ராஜபக்ச போன்றவர்களின் அனுபவம் தேவையில்லையெனில், அந்த காலத்தில் இருந்த அரசாங்க அதிகாரிகளின் அனுபவத்தையாவது பெற்றால் நாட்டுக்கு நல்லது.” என்றார் ஹரின் பெர்ணான்டோ.




