ஹீத்ரோ விமான நிலையத்தில் இன்று முதல் புதிய மாற்றம்
பிரித்தானியாவின் மிகப்பெரிய விமான நிலையமான லண்டன் ஹீத்ரோவில், பயணிகளுக்கான திரவப் பொருட்கள் தொடர்பான நீண்டகால கட்டுப்பாடுகள் இன்று முதல் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளன.
புதிய அதிநவீன ‘CT’ ஸ்கேனர்கள் (CT Scanners) அனைத்து முனையங்களிலும் (Terminals) பொருத்தப்பட்டுள்ளதால், இனி பயணிகள் தங்களது கைப்பைக்குள் 2 லீற்றர் வரையான திரவப் பொருட்களை எவ்விதத் தடையுமின்றி எடுத்துச் செல்ல முடியும்.
கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் அமுலில் இருந்த 100 மில்லி லீற்றர் (100ml) கட்டுப்பாடு இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
அத்துடன், பாதுகாப்புச் சோதனையின் போது மடிக்கணினிகள் (Laptops) மற்றும் மின்னணு சாதனங்களை பைகளில் இருந்து வெளியே எடுக்க வேண்டிய அவசியமும் இனி இருக்காது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த மாற்றத்தினால் பயணிகளின் காத்திருப்பு நேரம் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், ஏனைய நாடுகளின் விமான நிலையங்களில் இக்கட்டுப்பாடுகள் நீடிக்க வாய்ப்புள்ளதால், திரும்புவதற்கான விமானங்களின் விதிமுறைகளைச் சரிபார்க்குமாறு பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





