சிறுவர்களுக்காக நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கோரும் எதிர்கட்சி – தனிநபர் சட்டமூலத்தை சமர்ப்பிக்க தீர்மானம்
சமூக ஊடக தளங்களில் சிறுவர்களுக்கான பாதுகாப்பை வலுப்படுத்த இலங்கையின் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை கோரி இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலத்தை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷனா ராஜகருணா தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தம் சிறுவர்களை பாதுகாப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த திருத்தங்களில், பயனர்களின் வயது சரிபார்ப்பு, பெற்றோரின் அனுமதி, சிறுவர்களது நிகழ்நிலை பாதுகாப்பு அபாயங்களை மதிப்பிடுதல் மற்றும் சமூக ஊடகங்களில் இடம்பெறும் துன்புறுத்தல் மற்றும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை கட்டுப்படுத்தல் ஆகியவை அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல நாடுகள் ஏற்கனவே குழந்தைகளை பாதுகாக்கும் சட்டங்களை கொண்டுள்ளதாக கூறிய அவர் இலங்கையில் போதுமான பாதுகாப்பு இதுவரை அமுல்படுத்தப்படவில்லை என தெரிவித்தார்.
அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, சிறுவர்களுக்கான பாதுகாப்பை ஒரு பொதுவான முன்னுரிமையாக கொண்டு, இந்த சட்டமூலத்தை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், சிறுவர்கள் சமூக ஊடகங்களை அதிகமாக பயன்படுத்துவதால் அவர்களது நீண்டகால வளர்ச்சி பாதிக்கலாம் என்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா எச்சரித்தார்.





