மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் அஞ்சுவதாக ஹர்ஷ டி சில்வா குற்றச்சாட்டு
மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையின்கீழ் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்வரவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில், மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் சட்டம் இயற்றி கொடுப்பதற்கு நாடாளுமன்றம் தயாராகவே உள்ளது. பழைய முறைமையின்கீழ் தேர்தலை நடத்தலாம். ஆனால் கூட்டுறவு தேர்தல்களில் தோல்வி ஏற்படுவதால், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றது.” எனவும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு வரவு- செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் முறைமை தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டியது நாடாளுமன்றத்தின் பொறுப்பாகும் என ஜனாதிபதி தனது பாதீட்டு உரையின்போது வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





