அதிகரித்து வரும் நெருக்கடி – ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற தயாராகும் இளைஞர்கள்
ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வீட்டு விலைகள் மற்றும் வாடகைகள் காரணமாக பல இளம் தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேறுவது பற்றி சிந்தித்து வருவதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த விடயம் ஹோம் இன் பிளேஸ் (Home in Place) நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
18 முதல் 35 வயதுடைய ஆஸ்திரேலியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மலிவான வீடுகளுக்காக வெளிநாடு செல்வது குறித்து சிந்தித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வில் 16 சதவீதமானோர் நிச்சயமாக வேறு நாடுகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இந்த நிலைமையை நிவர்த்தி செய்ய வேண்டும் என ஹோம் இன் பிளேஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மார்ட்டின் கென்னடி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய புள்ளிவிவரப் பணியகத்தின் தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் சுமார் 221,000 நீண்டகால குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்கள் ஆஸ்திரேலியாவை நிரந்தரமாக விட்டுச் சென்றுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 8 சதவீத அதிகரிப்பாகும்.
இதற்கிடையில், ஆஸ்திரேலியாவின் சொத்து சந்தையும் சாதனை உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 12 மாதங்களில் தேசிய வீட்டு விலைகள் 7.5 சதவீதம் உயர்ந்துள்ளன.
பகுப்பாய்வு நிறுவனமான REA குழுமத்தின் தரவுகளின்படி, ஆஸ்திரேலியாவில் சராசரி வீட்டு விலை இப்போது 858,000 டொலர் மதிப்பை எட்டியுள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 51 சதவீதம் அதிகமாகும்.
ஹோம் இன் பிளேஸ் கணக்கெடுப்பின்படி, ஆஸ்திரேலியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வருமானத்தில் 30 சதவீதமான தொகையை வாடகைக்கு செலுத்துவதாகவும் கண்டறிந்துள்ளது.
இந்த பாதிப்புகள் காரணமாக பல இளம் ஆஸ்திரேலியர்கள் திருமணம், குழந்தைகளைப் பெற்றெடுத்தல் மற்றும் பல்கலைக்கழகக் கல்வி போன்ற முக்கிய வாழ்க்கை நிகழ்வுகளை தாமதப்படுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.





