பிரித்தானியாவில் இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் நிதி ஊக்கத்தொகை
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் இளைஞர் வேலையின்மை பிரச்சினையை எதிர்கொள்ள புதிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தொழிற்கட்சி அரசின் அண்மைய திட்டத்தின் கீழ், இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் நிதி ஊக்கத்தொகை வழங்க உள்ளது.
இதன்படி, 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் சலுகைகளைப் பெற்று ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேல் வேலை தேடி வரும் நிலையில் இருந்தால், அவர்களை வேலைக்கு அமர்த்தும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் £3,000 மானியம் வழங்கப்படும்.
மேலும், நீண்டகாலமாக வேலையின்றி உள்ளவர்களை வேலைக்கு அமர்த்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தற்போதைய மானியத் திட்டத்தையும் அரசாங்கம் விரிவுபடுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே , கல்வி, வேலைவாய்ப்பு அல்லது பயிற்சியில் இல்லாத 16 முதல் 24 வயதுடைய இளைஞர்கள் பிரித்தானியாவில் 09 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





